Wednesday 21 October 2015

வரிச்சூர் குடைவரை 2


மதுரை, வரிச்சூர் இயற்கை சார்ந்த சூழல் உலாவில் மீண்டும் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன்.  சமணச்சின்னம் ம.குன்னத்தூர் என்ற அரசு விளம்பரப்பலகை கண்டு நின்றோம். அங்கிருந்து பார்த்த பொழுது இயற்கையான பெரிய குகைத்தளம் இருந்தது. குகையில் சமணத்துறவிகள் வாழ்ந்ததற்கான படுகைகளும், மருந்து தயாரிக்க பயன்படுத்திய குழிகள் இருந்தன. குகையின் மேல் நெற்றிப் பகுதியில் மூன்று பிராமி கல்வெட்டுகள் சிதைந்த நிலையில் உள்ளன. இந்த பிராமிகல்வெட்டுக்கான விளக்க பலகை ஒன்றும் உள்ளது. இங்கு தங்கியிருந்த சமணர்களுக்கு நூறுகலம் நெல் வழங்கியதாக கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. நூறுகலம் நெல் வழங்கப்பட்டது என்றால் குறைந்தது சுமார் 50 சமணர்கள் தங்கியிருக்கலாம்.

Friday 16 October 2015

வரிச்சூர் குடைவரை


மதுரை என்றாலே மல்லுகட்டு. அதுவும் வரிச்சூர் என்றவுடன் பிரபல ரவுடியின் அடைமொழி என தமிழகம் தெரிந்து வைத்துள்ளது. ஆனால் உண்மையில் வரிச்சூர் நான்கு வணங்குதளத்தினை அருகருகே  பெற்ற புண்ணியபூமி. வரிச்சூர் மதுரையிலிருந்து சிவகங்கை நோக்கி செல்லும் பாதையில் அமைந்துள்ள அழகிய கிராமம். திருமங்கலத்திலிருந்து வரிச்சூர் சென்று குடைவரையை ரசிக்க நான்கு பேர் கொண்ட குழு பயணித்தது. பிரபல பறவையாளர் சலீம் அலி இருசக்கர வாகனப்பிரியர். தனது பெரும் பறவை கண்டுபிடிப்புகளை இருசக்கர வாகனப்பயணத்திலேயே கண்டதாக கூறியுள்ளார். அதனால் நாங்களும் இருசக்கர வாகனத்தில் அதிகாலை பொழுதில் கிளம்பினோம். கிராமங்கள் வழியாக பயணிப்பதே இனிமை. 

திருமங்கலத்திருந்து பி.கே.என் கல்லூரி, விடதக்குளம், விருசங்குளம், ஒத்த ஆலங்குளம், பெரிய ஆலங்குளம், வளையபட்டி வழியாக அவனியாபுரம் வந்தடைந்தோம். அதிகாலை பொழுதினை கிராமங்களில் குளிப்பதற்கு வெந்நீர்  போடுவதும் வயலுக்கு செல்வதுமான காட்சிகள் தொடர்ந்தன. அவனியாபுரத்தில் விமானம் ஓடுபாதையிலிருந்து பயணிகளை இறக்கிவிடும் பகுதிக்கு ஊர்ந்துகொண்டிருந்தது.  காலை பொழுதிலும் நெடுஞ்சாலை பயணிகள் பலர் கார்களை நிறுத்தி விமானம் பார்த்து கொண்டிருந்தனர்.