Monday 19 January 2015

படையல் ருசிச்சு பாரு

சென்னையில் புத்தகக்கண்காட்சி துவங்கி வாசிப்பின் அவசியத்தினை தமிழ் உலகிற்கு அறைகூவல் கொடுத்து வருகின்றது. தமிழ் எழுத்து உலகமே தனது படைப்புகளை சென்னை நோக்கி திருப்பி கொண்டுள்ளது. ஆனால் அதற்கு நேர்மாறாக ஓர் நிகழ்வு. மதுரை செக்கானூரனியில் காலை சூரியன் தனது கதிர்களை விரிக்க துவங்கிய தருணத்தில் நெற்கதிர்கள்  விளைந்த வயல்வெளிக்கு நடுவே கதிர் பொங்கல் மலர் 2015 “படையல்” வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில் மதப்பண்டிகைகளான தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்றவைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொங்கலுக்கு கொடுக்கப்படுவதில்லை. அதிக நாட்கள் பொங்கலுக்கு அரசு விடுமுறை விடப்பட்டாலும் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவதில்லை. பத்திரிக்கை உலகமும் தீபாவளி மலருக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொங்கல் மலருக்கு கொடுப்பதில்லை. தற்பொழுது அந்த நிலை சற்று மாறி வருகின்றது. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் மலர் கண்டிப்பாக வெளியிட வேண்டும் என்று உறுதி எடுத்ததன்  பலனாய் உதித்தது தான் கதிர் பொங்கல் மலர். புதிதாக எழுத துவங்கிய திருமங்கலம் இலக்கிய சகோதரர்களிடம் படைப்புகளை பெற்று அதனை வெளியிட்டது மேலும் சிறப்பு.  



படைப்புகளை புத்தகமாகக்  கொண்டு வருகையில் பலவழிகளில் சோதனைகள் எழுத்தாளனுக்கு ஏற்படுகின்றது. புதிதாக மத சாதிய வாந்திகளின் பிரச்சனைகளும் முளைத்துள்ளன. திருவிளையாடல் படத்தில் தருமியான நாகேஸ் மாறுவேடத்தில் புலவராக வந்திருக்கும் சிவனான சிவாஜியின் புலமையை சோதிப்பார். முதலில் சிவாஜி புலவர் என்பர் அவரது செல்வ கோலத்தினை பார்த்து முதலில் சந்தேகிப்பார். பின் புலமையை சோதிப்பர் நாகேஷ். சேர்ந்தே இருப்பது என கேட்க சிவாஜி புலமையும் வறுமையும் என்பார். இவ்வாறு பலகஷ்ட சூழ்நிலையில் படைப்புகளை புத்தகமாக வெளியிடுபவர்களுக்கு  நன்கொடை கொடுத்து உதவ வேண்டியது இல்லை. புத்தகங்களை வாங்கி படிப்பதும் மற்றவர்களிடமும் அறிமுகம் செய்து விற்று கொடுத்தாலே மிகப்பெரிய உதவியாகும்.


கதிர் பொங்கல் மலர் 2015 படையல் இம்முறை அதிசிறப்பாக வந்துள்ளது. முன் அட்டையில் துவங்கி  பின் அட்டைவரை இயற்கை சூழலியல், தமிழ், தமிழர் என சர்க்கரை பொங்கலாய் பொங்குகின்றது. புத்தகத்தின் முதல்பக்கத்தில் நம்மாழ்வார் சிரிப்பினில் நுழைக்கின்ற நாம் கடைசி பக்க ஆலமர படத்தினை பார்த்து முடித்து தான்  கீழே வைக்க மனம் வரும். தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளும் கட்டுரைகளும்  படிப்பவர் மனதினை கொள்ளை  கொள்ளும். சித்திர வீதிக்காரனின் நம்மாழ்வார் உரை தொகுப்பும், பூரொட்டி, வாசிப்பது தியானம் கட்டுரைகள் வாசிப்பாளர்களை மெய்மறக்கச் செய்யும். தம்பி இளஞ்செழியனின் கட்டுரைகளும், நீரைத் தேடும் வேர்கள் சிறுகதையும் அருமை. படிப்பவர்களுக்கு முதல் படைப்பு என்று தெரியா வண்ணம் உழவின்றி அமையாது உலகு கட்டுரையை முத்து செல்வக்குமார் படைத்துள்ளார். 


உண்டுவளர்ந்தானின் அறுவடைக்கால நினைவலைகள் நம்மை கிராமத்திற்கே அழைத்து செல்கின்றது. படையல் என்பது கடவுள்களை வணங்கும் பொழுது வைக்கப்படும் பொருட்களை குறிப்பது. மனித கடவுளர்களான நமக்காகவே இப்படையல் படைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத்தினை  படிப்பதுடன் பலரையும் படிக்க தூண்டவும். மொத்தத்தில் இப்படையல் உண்மையில் அலாதி தனிச்சுவை உடையது. சேர்ந்து ருசிப்போம் வாருங்கள்.
                             வஹாப் ஷாஜஹான், 99425 22470.
                                            திருமங்கலம்.

பொங்கல் சிறப்பு மலர் படையல் புத்தகம் வேண்டும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவும்.9444341361



2 comments:


  1. மிகச் சுவையான உணவை முடித்தப் பிறகு போடுகிற பீடா, அலாதியாக ருசிக்கும். அதுபோல, பிரமாதமான ஒரு படையலை படித்து முடித்தப் பிறகு, அது குறித்து ‘உழைப்பாளி’ பகிர்ந்து கொண்டிருக்கிற இந்த விமர்சனக் கட்டுரை, கூடுதல் மணம், ருசி சேர்க்கிறது. புத்தகங்களை பலரிடமும் கொண்டு சென்று சேர்க்கவேண்டும் என்று கருத்திட்டிருக்கிறார். உண்மைதான். ‘உழைப்பாளி’க்குத்தானே தெரியும் உழைப்பின் அருமை? படையல் புத்தகம் போலவே, இந்த விமர்சனமும் கவர்கிறது. விமர்சனக் கட்டுரையில் நான் கண்டுபிடித்த ஒரே ஒரு குறை... இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிற ‘காண நிலம் வேண்டும் பராசக்தி’ என்கிற மெய்சிலிர்க்கச் செய்கிற கவிதை பற்றி விரிவாகவே அறிமுகம் செய்திருக்கலாம் (ஒருவேளை அந்தக் கவிதை பற்றி மட்டும் தனியாக பதிவிடும் எண்ணம் இருக்கிறதா... தெரியவில்லை).

    நன்றி.

    - திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் -

    ReplyDelete
  2. நன்றி கிருஷ்ணகுமார். அதே திருவிளையாடல் படத்தில் நாகேஸ் தான் புலவர் தான் இருந்தபோதும் கொஞ்சம் உரைநடையாக பாடுகின்றேன் என்பார் அது மாதிரி தான் என் கவிதை "காண நிலம் வேண்டும் பராசக்தி’ கொஞ்சம் சகித்து கொள்ளுங்கள் குமார்

    ReplyDelete