Saturday 24 May 2014

போரின் மறுபக்கம்

       
   

                     புத்தக விமர்சனம்
புத்தகத்தின் பெயர் : போரின் மறுபக்கம்
வெளியிடு         : காலச்சுவடு பதிப்பகம்
விலை            : ரூபாய் 200
ஆசிரியர்          : தொ. பத்தினாதன்.

அனுபவமிக்கவர்கள் நம்மிடம் “ உலகில் உன்னை விட வறுமையிலும் கஷ்டத்தில் இருப்பவர்களை பார்த்து நீ எந்தளவு சுகபோகியாய் இருக்கின்றாய் என தெரிந்து கொள் ” எனக்கூறுவர். ஆம் இந்த புத்தகத்தினை படித்ததால் சவால் விட்டு கூறுவேன் தமிழகத்தில் உள்ள மக்களில் ஆக கடைசி வறுமையாளர்களை விட இலங்கை தமிழ் அகதிகள் மிகுந்த வறுமையிலும் மனகஷ்டத்திலும் உள்ளார்கள் என்று.
தொ. பத்தினாதன் என்ற அகதியின் சுயசரிதையை படித்தபின்பு வலைதளங்களில் சினிமாவிற்கும்,பாலியல் கவிதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதுபவர்களை புளிச்ச ஏப்பகாரர்களாகவே பார்க்கின்றேன். அவர் தன் எழுத்துக்களில் மனநோயாளியாய், பாதிக்கப்பட்டவர்களின் குரலாய், நண்பர்களுக்கு கடமைபட்டவராய், சக அகதிகளின் சூதாட்டகுணங்களையும், க்யூ பிரான்ச் போலிஸிற்கு பயந்த கூட்டமாய், மலம் கழிக்கக்கூட இடமில்லாதவர்களாய் பலவழிகளில் அவர் தம் நடந்துவந்த பாதையில் நம்மையும் புத்தகத்துடனேயே அழைத்து செல்கிறார்.

Wednesday 21 May 2014

கொடைக்கானலில் பசுமைநடை


சேர,சோழ,பாண்டிய மன்னர்களையும்,மொகலாய மன்னர்களையும்,ஆங்கிலேய ஆட்சியாளர்களையும் பள்ளி வரலாற்று புத்தகத்தில் மொட்டை மனப்பாடமாக கரைத்து குடித்து பரிட்சை அறையில் கக்கி பள்ளியில் தேறிவருவது தான் நமது வளமை.ஒருவரிடம் உங்கள் தாத்தாவின் அப்பா பெயர் என்ன?என வினா எழுப்பினால் 70 சதவீதத்தினருக்கு தெரியாது.இன்னும் தாத்தாவின் தாத்தா பெயர் கேட்டால் 90 சதவீதத்தினருக்கு தெரியாது. பெரும்பாலோர் தங்கள் குடும்ப வரலாற்றினையே தெரிந்து வைப்பது இல்லை. அப்புறம் எப்படி தான் சார்ந்த ஊர் வரலாறு,தனது பகுதியில் இருக்கும் கோயில்கள், இயற்கையின் அருட்கொடையான மலைகளில் வாழ்ந்த பழங்குடியினர்களின் வரலாறு அறியும் ஆர்வம் ஏற்படும்.
தமிழ்குடி தான் உலகின் மூத்த குடி என்ற உண்மைதனை வாய்மொழியில் பெருமை பேசுவதினைக் காட்டிலும் நமது சுற்றுப்பகுதிகளில் உள்ள தொண்மை நிறைந்த பகுதிகளின் வரலாற்றினை அறிவதும் நமதுவாரிசுகளுக்கும் அறிவிக்கின்ற பணி இன்று தலையானதாகும்.  இந்த பணியினை திருவிழாக்களின் நகரான மதுரையை தலைமையிடமாக கொண்டு பசுமைநடை குழுவினர் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.